வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஏறுமயிலேறி -- Eru Mayil Eri (முருகன் பாமாலை)


             முருகன் பாமாலை


       


 ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே


கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

பொருள்:

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு
முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு
முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்
தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை
உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு
முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன்
ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து
ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

... அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை
நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

உள்விளக்கம்:

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்

... இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.

மற்றும்:

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின்

திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து
இகபர செளபாக்கியத்தை அருளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome

மலர் ஜோதிடம் - முருகன் வழியில் சித்தர் வெளிப்படுத்தும் உண்மை!

 முருகன் அருளால் மலர் ஜோதிடம்: சித்தர் வாக்கு, நன்மை தரும் பலன்கள். பூக்களின் ஜோதிடம் என்பது வெறும் கணிப்பு முறை மட்டுமல்ல, இது நம் முன்னோர்...